15 பேரை பலியெடுத்த பசறை விபத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்த தகவல்

பசறை 13ம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவரே இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான், இந்த பேருந்திலேயே நாளாந்தம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எனினும், பஸ் விபத்துக்குள்ளான கடந்த 20ம் திகதி, நொடி பொழுதில் அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு இம்ரான் கானுக்கு முடியாது போயுள்ளது. இம்ரான் கான் வழமையாக ஏறும் இடத்திற்கு பேருந்து, சுமார் 7:15 அளவில் வந்துள்ளது.
பேருந்தை நிறுத்துமாறு கைகளை காண்பித்து கோரிய போதிலும், சாரதி, பேருந்தை நிறுத்தாது பயணித்துள்ளதாக இம்ரான் கான் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில், பேருந்தின் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பயணித்ததை தான் அவதானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிறுத்தாது பயணித்து, சில நொடிகளில் தன் கண் முன்பாகவே பள்ளத்தில் குடைசாய்ந்து, விபத்துக்குள்ளாகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.