கிளிநொச்சி கறுக்காய்த்தீவு மகாவித்தியாலயத்தின் புனரமைப்பு எப்போது? பெற்றோர் விசனம்
கிளிநொச்சி கறுக்காய்த்தீவு மகாவித்தியாலயத்தின் வளங்களை, பூர்த்தி செய்து தருமாறு, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி கல்விக்கோட்டத்துக்குட்பட்ட கறுக்காய்த்தீவு மகாவித்தியாலயத்தில், அதிகமானோர் கல்வி கற்று வரும் நிலையில், இவர்களுக்கான கல்வியை வழங்குவதற்கு, 27 ஆசிரியர்கள் தேவையாக உள்ளதாகவும் ஆனால், 21 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களுக்கு, ஆசிரியர் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதேவேளை, காவலாளி மற்றும் ஏனைய கல்வி சாரா உத்தியோத்தர்களுகக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதனைவிட, மணாவர்களுக்கான போதிய வகுப்பறைக்கட்டங்கள் இல்லாத நிலையில், சில வகுப்புக்கள், தற்காலிக கொட்டகைகளிலேயே, நடைபெற்று வருகின்றன.
கடந்த 1960ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை, 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக, பத்தினிப்பாய் பகுதியில் இயங்கியது. இதன் பின்னர், 2006ஆம் ஆண்டில், யுத்தம் காரணமாக, மீளவும் செக்காலை அரசபுரம் பகுதியில் இயங்;கியது. 2008ஆம் ஆண்டு, செக்காலையிலிருந்து கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இணைப்பு பாடசாலையாக இயங்கியது.
இவ்வாறு பல்வேறு சவால்களையும் இயல்புகளையும் சந்தித்த இப்பாடசாலை, மீண்டும் 2010ஆம் ஆண்டு, மீளவும் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கி இன்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றது. எனவே, இன்னும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும் இந்தப் பாடசாலைக்குரிய வளங்களை விரைவில் பூர்த்தி செய்து தருமாறு, மாணவர்களின் பெற்றோர், உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.