ஆனைவிழுந்தான்குளம் கிராமத்துக்கு இதுவரை பஸ் சேவைகள் நடைபெறவில்லை : மக்கள் விசனம்
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் கிராமத்துக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமத்துக்கு இதுவரை பஸ் சேவைகள் நடைபெறவில்லை.
முழங்காவில் பகுதிகளுக்கு நடைபெறும் பஸ்களுக்காக இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று பஸ்களில் பயணிக்க வேண்டிய நெருக்கடி காணப்படுகின்றது.
கிளிநொச்சி நகரம், அக்கராயன் பிரதேச மருத்துவமனை, கரைச்சி பிரதேச செயலகம், பாடசாலைகள் என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கடந்த வருடம் இக்கிராமத்துக்கு வருகை தந்த போது, கிராமம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை வெளிப்படுத்திய மக்கள், பஸ் சேவையினை தமது கிராமத்தின் பாடசாலை வரை வந்து செல்லக் கூடியவாறு பணியில் ஈடுபடுத்துமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டது.