கிளிநொச்சியில் தொழிற்சார் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மீனவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதியில் வாழ்ந்து வரும் 3389 மீனவர்கள் தமது தொழிசார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ள எழுபது வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும், 4205 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இதில் தற்போது கரைச்சி கண்டாவளை, பச்சலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் 3389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை, காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள நன்னீர் குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வரும் 750 வரையான குடும்பங்களும் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.