வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் :- முகவருக்கு நடந்த சம்பவம்..!
யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரி மைதானத்தில் ‘வடக்கின் போர்’ கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது காலாவதியான குளிர் பானங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சோடா வகைகள் மற்றும் யூஸ் வகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இதில், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையில் 100 ரூபாவுக்கு அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாகத்தில் அங்கு வந்த மாணவர்கள் காலாவதித் திகதியைப் பார்க்காமல் அதனை பெற்று அருந்தியுள்ளனர்.
ஆனால், அதனை பெற்றுக்கொண்ட ஒரு மாணவர் மட்டும் காலாவதித் திகதியை பார்வையிட்ட பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விற்பனையினை தடை செய்ததுடன், பொதுச் சுகாதாரப் பிரிவினா் காலாவதியான சோடா வகை மற்றும் யூஸ் வகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த விற்பனை நிறுவனத்தின் யாழ்ப்பாண முகவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.